ஆர்எஸ்எஸ்ஸை பார்த்துக் கற்றுக்கொண்ட பிறகு விஜய் விமர்சிக்கட்டும்: எல். முருகன்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பார்த்துக் கற்றுக்கொண்டு அதன்பிறகு ஆர்எஸ்எஸ்ஸை தவெக தலைவர் விஜய் விமர்சிக்கட்டும் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் 5 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையின் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் எம் முருகன் பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள், பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் எல்.முருகன், விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் வெகு விமரி சையாக நடைபெற்று வருவதாகவும் சகோதரர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.
"தமிழக முதலமைச்சர் என்கிற முறையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை முதல்வர் கூற வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை, நாங்களும் வலியுறுத்தி வருகின்றோம்.
கேரத்ளத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். அதற்கு அங்குள்ள ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போலி வேடம் போடுகிறார் முதல்வர்.
நான் வேல் யாத்திரை நடத்தியபோது அப்பாவும் மகனும் சேர்ந்து வேல் பிடித்தனர். வெளியில் கடவுள் மறுப்பு பேசிவிட்டு வீட்டுக்குள் சாமி கும்பிடுகின்றார்கள்.
கேரளத்தில் நடக்க இருக்கிற ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டு ஐயப்பனின் புனிதத்தை ஸ்டாலின் கெடுக்கக் கூடாது.
பிகார் சென்றுள்ள முதல்வர் அங்கு இந்தியில்தான் பேசியாக வேண்டும். ஆங்கிலத்தில் பேசினால் அங்கு இருப்பவர்களுக்கு புரியாது.
மும்மொழி கல்விக் கொள்கை அவசியம். ஸ்டாம்ப் ஒட்டுவதுபோல் தேசிய கல்விக் கொள்கையை காப்பி அடித்திருக்கிறார்கள்.
ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்க கூடாது , விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல் மற்ற பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுகிறார். எதிர்ப்பு வலுத்துள்ளதால் தன்னுடைய பிரதிநிதிகளை ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளார்.
வரும் தேர்தலில் திமுக மிகப்பெரும் தோல்வியை தழுவ உள்ளது. காலை உணவுத் திட்டம் சரியாக முறையாக குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமானது. அதன் செயல்பாடுகள் வெளிப்படையானது. தெலங்கானா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இண்டி கூட்டணி வெற்றி பெற்றபோது மட்டும் தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதா?
திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. சிலிண்டர் மானியம், டாஸ்மாக் குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக நம்பிக்கை துரோகம் செய்யும் கட்சியாகவே உள்ளது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டு கண்ட சமூக இயக்கம். நேரு , அம்பேத்கரே ஆர்எஸ்எஸ் பற்றி புகழ்ந்துள்ளனர். சென்னையில் வெள்ளம் வரும்போது முதல் களப்பணியாளர்கள் ஆர்எஸ்எஸ் .
ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்பதாக விஜய் கூறுவதாக கேட்கிறீர், ஆர்எஸ்எஸ் கருத்தை அதிமுக கேட்டால் அது வரவேற்கத்தக்கது.
விஜய்யும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டு அதன்பிறகு விமர்சிக்கட்டும்" என தெரிவித்தார்.