ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?
கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்மா காந்தியைச் சந்தித்த நிகழ்வின் 100வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொள்ள காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி சென்றிருந்தார்.
அந்த நிகழ்வில் பேசிய அவர், “நமது நாட்டின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை, சங் பரிவார் மேலும் பரப்பி வருகின்றது” என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் நேற்று மாலை (மார்ச் 12) நெய்யாற்றின்கரை பகுதியில் மறைந்த காந்தியவாதி கோபிநாதன் நாயர் என்பவரின் சிலையைத் திறந்து வைக்க துஷார் காந்தி சென்றார்.
இந்த நிலையில் அங்கு கூடியிருந்த ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் அவரது காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!
துஷார் காந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள் அவர் பேசியதைத் திரும்பப் பெறுமாறு வாக்குவாதம் செய்தனர்.
இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தனது கருத்தில் இருந்து பின்வாங்க மறுத்த துஷார் காந்தி காரிலிருந்து இறங்கி “காந்தி வாழ்க, ஆர்எஸ்எஸ் ஒழிக” என்று கோஷமிட்டபடியே கிளம்பிச் சென்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பின்னர் பேசிய துஷார் காந்தி, “அவர்கள் என் காரை மறித்தனர். ஆனால், தாக்குதலில் ஈடுபடவில்லை. நான் அவர்கள் மீது எந்தப் புகாரும் அளிக்கவில்லை” என்று தெரிவித்தார்,
கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் எம்பி இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் “கோட்சேவின் பேய் ஆர்எஸ்எஸ், பாஜகவை பிடித்துள்ளது. காந்தியைக் கொன்ற கோட்சேவின் புகழ்பாடும் வகுப்புவாதக் கூட்டத்திற்கு கேரள மண்ணில் இடமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.