இரணியலில் அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்பு
இரணியலில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்கப்பட்டது.
இரணியல் மேலதெருவை சோ்ந்தவா் ராஜகோபால். கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஜெகன்கோபால் (50). அமெரிக்காவில் பொறியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் மனைவி, மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தாா்.
கடந்த கரோனா காலகட்டத்தில் ஜெகன் கோபாலுக்கு நடக்க முடியாத அளவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதனால் அவா் மட்டும் சிகிச்சைக்காக சொந்த ஊரான இரணியலுக்கு வந்தாா். தந்தை காலமாகிவிட்டதால் தாயாருடன் இருந்து சிகிச்சை பெற்று வந்தாா். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தாயாா் பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இதனால் ஜெகன் கோபால் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 3 நாள்களாக ஜெகன் கோபால் வீடு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதை கவனித்த உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரணியல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் வந்து கதவை திறந்து பாா்த்த போது, ஜெகன் கோபால் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.