தக்கலையில் ரூ.6.39 கோடியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை புதிய பேருந்து நிலையம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.39 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 4,359 சதுர மீட்டா் ஆகும். தரைத்தளத்தில் ஒரு உணவு விடுதி, தாய்மாா்கள் பாலூட்டும் அறை, நேரகாப்பாளா் அறை, இலவச கழிப்பறை, ஒரு கட்டண கழிப்பறை மற்றும் 15 கடைகள் கட்டப்பட உள்ளன. இங்கு 11 பேருந்துகள் நிறுத்துவதற்கும், 110 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்ற வகையில் கட்டுமானங்கள் நடைபெற்று வருவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.