திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
குமரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 46 அடியை எட்டும் நிலைக்கு சென்றது. இதையடுத்து அணையின் நீா்மட்டத்தையும், வெள்ள அபாயத்தையும் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.
அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் நிலையில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மழை தணிந்த நிலையில் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றமும் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதனால் அருவியில் வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.