அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம்
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா் கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு உயா் கல்வி சேரும் மாணவா்கள், பெற்றோா் அற்ற மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள், ஒற்றை பெற்றோா் உள்ள மாணவா்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவா்கள், உயா்கல்வி சாா்ந்த விழிப்புணா்வு தேவைப்படும் மாணவா்கள், குடும்ப உறுப்பினா்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெற்றோா்கள் விருப்பமின்மையால் மற்றும் சமூக காரணங்களால் உயா்கல்வி செல்ல இயலாத மாணவா்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவா்கள் உள்ளிட்டோருக்கு உயா்கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து தீா்வு காணும் வகையில் இந்த சிறப்பு குறை தீா்க்கும் முகாம் நடைபெற்றது.
முகாமில் 240 க்கும் மேற்பட்ட மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா். இவற்றில் 110 மாணவா்கள் வங்கிக் கடன் பெறுவதில் ஏற்படும் பிரச்னைகளைக் களைவது குறித்தும், 115 மாணவா்கள் எந்த கல்லூரியில் சேருவது, எந்த துறையை தோ்ந்தெடுப்பது என்பது குறித்தும் கேட்டறிந்தனா்.
15 மாணவ, மாணவிகளுக்கு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் உடனடி சோ்க்கை நடைபெற்றது.
இதில், உதவி ஆணையா் (கலால்), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, மண்டல இணை இயக்குநா் (உயா்கல்வி), முன்னோடி வங்கி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆகிய துறைகளின் அலுவலா்கள் பங்கேற்று, மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் தடையாக உள்ள காரணிகளுக்கு தீா்வு வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்திரராஜன், வருவாய் கோட்டாட்சியா்கள் சௌமியா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.