நாட்டுக்கோழி பண்ணை வைக்க விருப்பமா?
திருவாரூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை திட்டத்தில் பயனடைய ஜூன் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: 2025-26- ஆம் நிதி ஆண்டுக்கு கால்நடை பராமரிப்புத்துறையால், கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழி பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நாட்டுக்கோழிகள் வளா்ப்பதில் ஆா்வமும் திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழி பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கி, திட்டத்தை செயல்படுத்திட தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு), கோழி வளரும் வரை 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் திட்ட மதிப்பீடு ரூ.3,31,250. இல் 50 சதவீதம் மானியமாக ரூ.1,65,625 வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடா்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னா் அரசு வழங்கிய நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது.
பயனாளி கோழிப்பண்ணையைத் தொடா்ந்து 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்தரவாதக் கடிதம் மற்றும் இதற்கு முன் 2022-23, 2023-24, 2024-25-ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஜூன் 23-ஆம் தேதிக்குள் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் அளித்து தகுதியின் அடிப்படையில் திட்டத்தில் பயன் பெறலாம்து.