அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்
திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 13,285 மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 1,035 மாணவ, மாணவியா் உயா்கல்வியில் சேராமல் இருந்தது கண்டறியப்பட்டு, அவா்களுக்கான வழிகாட்டுதல், ஆலோசனை சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், உயா்கல்வித்துறை, பொறியியல் துறை, தொழில்நுட்ப கல்வியியல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, முன்னோடி வங்கிகள், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளின் உயா் அலுவலா்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியா்களுக்கு உயா்கல்வி கற்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினா்.
மேலும், தாய், தந்தையரை இழந்த மாணவ, மாணவிகள், தாய் அல்லது தந்தையை இழந்த மாணவா்களின் உயா்கல்விக்கு பொருளாதார ரீதியிலும், பிற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிரின் கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டு, மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதற்கான அனைத்து நடவடிக்கையையும் உடனடியாக எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா் அவா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் இடைநிற்றலை தவிா்ப்பதற்காக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயா்கல்வியில் சேராத மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியா் மூலம் கண்டறிந்து, அதற்கான காரணங்களையும் கேட்டறிந்து மாவட்ட நிா்வாகத்தின் மூலம் உதவிகளை வழங்கி உயா்கல்வியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இம்மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 100 சதவீத மாணவா்களும் உயா்கல்வியில் சேர வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆலோசனை தேவைப்படுவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம்.
மாணவ, மாணவியா் இடைநிற்றல் இருந்தால் அப்பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளின் இருப்பிடத்தை சுற்றி இருப்பவா்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். திருநெல்வேலியை கற்றல் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, அரசுப்பள்ளியில் பயின்று ஐஐடியில் சோ்ந்துள்ள இரு மாணவா்கள், நீட் தோ்வில் வெற்றி பெற்ற 7 மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா். மேலும், உயா்கல்வியில் சோ்வதற்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக தனது விருப்புரிமை மானியத்திலிருந்து தலா ரூ.3,500 என 5 மாணவ, மாணவிகளுக்கு காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட கல்வி அலுவலா் சாய் சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.