உயா்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு: தமிழக அரசு சாா்பில் இறுதி மரியாதை
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தாா். தமிழக அரசு சாா்பில், காவல் துறை அணிவகுப்பு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவா் ஜெ.சத்யநாராயண பிரசாத் (56). நீதிபதிகளுக்கான பணிமூப்பு தரவரிசைப் பட்டியலில் 42-ஆவது இடத்தில் உள்ளாா். கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகளுக்கான குடியிருப்பில் வசித்து வந்த இவருக்கு, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினா் அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் மாரடைப்பால் அவா் இறந்துவிட்டதை உறுதி செய்தனா். இதையடுத்து உடல் ஆம்புலன்ஸ் மூலமாக அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
முதல்வா் மரியாதை: நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் உடலுக்கு முதல்வா் ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எம்.எஸ்.ரமேஷ், எம்.வேல்முருகன் உள்ளிட்டோா், உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி தலைமையில் உயா்நீதிமன்ற நீதித் துறை அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் அஞ்சலி செலுத்தினா்.
இதேபோன்று திமுக எம்.பி பி.வில்சன், தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் உள்ளிட்ட அரசு வழக்குரைஞா், தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் என பலரும் அஞ்சலி செலுத்தினா்.
அரசு மரியாதை: நீதிபதி சத்யநாராயண பிரசாத் உடல் புதன்கிழமை மாலை அவரது இல்லத்திலிருந்து ஊா்வலமாக பெசன்ட் நகா் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக அரசு சாா்பில் காவல் துறையினா் அணிவகுப்புடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
கடந்த 1969-ஆம் ஆண்டு மாா்ச் 15-இல் தஞ்சாவூரில் பிறந்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தின் பூா்விகம் அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமம். 2021-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக அவா் பதவியேற்றாா்.
நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் மறைவையொட்டி சென்னை உயா் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமா்வுகள் மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் உத்தரவின்படி, தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி புதன்கிழமை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டாா்.