உயில், கிரையம், தான செட்டில்மென்ட், விடுதலை பத்திரம்.. சொத்தை எப்படி எழுதி கொடுக்கலாம்?
வாழ்க்கை முழுவதும் ஓடி, உழைத்து சம்பாதித்த சொத்துகளை நமக்கு பிறகு யாருக்கு சேர வேண்டும் என்பதை மிகவும் கவனமாக முடிவு செய்கிறோம். ஆனால், அதை சரியாக செய்கிறோமா... அது அவர்களிடம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சேர்ந்துவிடுமா... சொத்து எழுதி வைத்தப்பிறகு நமக்கு எதாவது பிரச்னை ஏற்படுமா? போன்ற ஏகப்பட்ட கேள்விகளும், பயமும் பொதுவாக இருக்கிறது.
அந்தக் கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் மூத்த வழக்கறிஞர் மகேஸ்வரன்.

"ஒருவரிடம் இருந்து சொத்திற்கான காசை வாங்கிவிட்டு, அதை அவர்களது பெயருக்கு எழுதி கொடுக்கிறோம் என்றால் அது 'கிரையம்'. இதற்கும், விருப்பத்தின் பெயரில் ஒருவரது பெயருக்கு சொத்தை எழுதி வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளதற்கு இரண்டு ஆப்ஷன்கள் உள்ளது. ஒன்று உயில். இன்னொன்று தான செட்டில்மென்ட். மற்றொன்று விடுதலை பத்திரம். இந்த மூன்றிற்கும் கிரையத்தைப்போல பணம் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.
உயில் என்றால் என்ன?
உயில் என்றால் வாரிசுகள், பிடித்தவர்கள் போன்றோர்களுக்கு சொத்தை எழுதி தருவது ஆகும். சொத்துகளின் சொந்தக்காரர் இறந்தப்பிறகு தான், உயில் நடைமுறைக்கு வரும். அவர் யார் பெயரில் சொத்தை எழுதி வைத்தாரோ அவரது பெயருக்கு சொத்துகள் மாறும். இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது தான்.
தான செட்டில்மென்ட் என்றால் என்ன?
ஒருவரது பெயருக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுக்கிறோம் என்றால் அது உடனடியாக அவரது பெயருக்கு மாறிவிடும். அதன் பின்னர், அந்த சொத்திற்கும், நமக்கும் சம்பந்தம் இருக்காது.
நிபந்தனை கொண்டது, நிபந்தனையற்றது என்று தான செட்டில்மென்ட் இரண்டு வகைப்படும்.
நிபந்தனை கொண்ட தான செட்டில்மென்ட் என்றால் எதாவது நிபந்தனையோடு சொத்தை இன்னொருவர் பெயருக்கு எழுதி தருவது ஆகும். உதாரணத்திற்கு, ஒரு தாய் தனது மகன் பெயருக்கு சொத்தை தான செட்டில்மென்ட் மூலம் எழுதி தருகிறார் என்றால் வாழ்நாள் முழுவதும் என்னை பார்த்துகொள்ள வேண்டும் என்பதுப்போன்ற நிபந்தனையோடு எழுதி தருவது ஆகும்.

இந்த நிபந்தனையை அவரது மகன் மீறும்பட்சத்தில், அந்த சொத்து மீண்டும் தாயின் பெயருக்கு வந்துவிடும். பின்னர், அவர் அந்த சொத்தை யார் பெயரில் வேண்டுமானாலும் எழுதி வைத்துகொள்ளலாம்.
நிபந்தனையற்ற தான செட்டில்மென்ட்
எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் மற்றொருவர் பெயருக்கு தன் சொத்தை எழுதி தருவது ஆகும். கடைசி காலத்தில், சொத்து எழுதி கொடுத்தவரை சொத்து வாங்கியவர் கவனித்துகொள்ளவில்லை எனில் ஒன்றும் செய்ய முடியாது.
விடுதலை பத்திரம்
அண்ணன், தம்பிகள் நான்கு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். மூன்று பேர் சேர்ந்து ஒருவருக்கு சொத்தை எழுதி தர முடிவு செய்கிறார்கள்.
குறிப்பிட்ட பணம் பெற்றுகொண்டோ அல்லது அப்படி எதுவும் இல்லாமல் கூட, விடுதலை பத்திரத்தை அந்த ஒரு சகோதரருக்கு எழுதி கொடுக்கும்போது, அது அவரிடம் சேர்ந்துவிடும்.

இந்தப் பத்திரத்தின் பொருளே, நம் பெயரில் இருக்கும் ஒரு பத்திரத்தை இன்னொருவருக்கு விடுதலை செய்து தருவதாகும். இது பெரும்பாலும் பாகப்பிரிவினைகளில் பயன்படுத்துவர். உங்களது விருப்பத்திற்கேற்ப இந்த மூன்று வகைகளில் எந்த வகையில் வேண்டுமானால் நீங்கள் உங்களது சொத்தை இன்னொருவருக்கு எழுதி கொடுக்கல்லாம். ஆனால், அதில் கவனமும், உங்களுடைய பிற்கால பாதுகாப்பையும் கருத்தில் கொள்வது மிக முக்கியம்" என்று கூறுகிறார்.