உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை
புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இரண்டு மருத்துவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
புடோன் மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவக் கல்லூரி மருத்துவா்களும், சுகாதார ஊழியா்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக சிறுமியின் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா். இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி நிா்வாகம் மூன்று உறுப்பினா்களைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. விசாரணைக் குழு தனது அறிக்கையை வியாழக்கிழமை மாலை சமா்ப்பித்தது.
அதனடிப்படையில், இதில் தொடா்புடைய ஒப்பந்த மருத்துவா்கள் இருவா் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இரண்டு மருத்துவா்கள் ஒரு மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.
மருத்துவக் கல்லூரியின் முதல்வா் மருத்துவா் அருண்குமாா் கூறுகையில், ‘பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவா்கள் சிறுமி அனுமதிக்கப்பட்ட நேரத்தில், கிரிக்கெட் விளையாடவில்லை. கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்றிருந்தனா். குழந்தைகள் நல மருத்துவா்கள், சுகாதார ஊழியா்கள் இல்லாத காரணத்தால், சிறுமி வெவ்வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு பின்னா் உயிரிழந்தாா்’ என தெரிவித்தாா்.