வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!
ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், 2021-ல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தது. மே 7-ஆம் நாள் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். நாளை மே 7. திமுக அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது.
சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது!
அரசுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று, கொள்கை அரசு!
இன்னொன்று, சேவை அரசு!
நமது அரசு, கொள்கை – சேவை இரண்டிலும் சிறந்து விளங்குகின்ற அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் வந்தன. எவ்வளவு அவதூறுகள். இருந்தாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை! எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் சோர்ந்து போகவில்லை!
அதனுடைய வெளிப்பாடுதான் அரசின் முத்திரைத் திட்டங்கள்…
* கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்
* விடியல் பயணம் திட்டம்
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
* புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்
* நான் முதல்வன் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க முடியும்!
அரசின் செய்தி அறிக்கையை வெளியிடுவது - நேரலை செய்வது என்று மட்டுமல்லாமல், திட்டங்களின் நோக்கத்தை விளக்குவது - திட்டங்களால் பயன்பெற்றவர்களின் பேட்டிகளை பதிவு செய்து வெளியிடுவதும்தான்.
என்னைப் பொறுத்தவரைக்கும் - விமர்சனங்களை முன்வைத்தால், அதனை ஆக்கபூர்வமாக நான் ஏற்றுக்கொள்கிறவன். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன்.
உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால்...
இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறோம், அதனை மனப்பூர்வமாக பாராட்டவேண்டும். விமர்சிக்க வேண்டாம் என சொல்லவில்லை. அறுபதாண்டுகால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டிருப்பதுதான். எனவே, நம்முடைய அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான கருத்துகள் – ஆலோசனைகள் இருந்தால் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்… அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவோம்!
பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயாங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்த, உங்களுடைய ஆழமான - பரந்துபட்ட பார்வையும், அனுபவமும் மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும்! இலட்சியங்களை அடையும் பயணத்தில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
எனவே, தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ பாராட்ட வேண்டும் என்று கேட்கவில்லை; தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் - தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.