ஊட்டி மாரியம்மன் கோயில்: பாரம்பர்ய தேரோட்டம் காண அலையெனத் திரண்ட மக்கள்; உப்பு செலுத்தி வழிபாடு!
மலை மாவட்டமான நீலகிரியில் இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில்.
மாரியம்மன் மற்றும் காளியம்மன் ஆகிய இரு பெண் தெய்வங்களும் ஒரே கருவறையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தனித்துவமாக இந்த ஆலயம் விளங்கி வருகிறது.

சித்திரை மாதத்தில் நடத்தப்படும் ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பே விழா தொடங்கி நாள்தோறும் உபயதாரரகளின் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். முத்தாய்ப்பாக இறுதியில் அம்மனின் பெரிய தேர் பவனி கோலாகலமாக நடைபெறும்.
இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த மாதமே தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் உபயதாரரகளின் பங்களிப்பில் தேர் பவனி நடைபெற்று வந்தன.
விழாவின் மிக முக்கிய நிகழ்வான பெரிய தேர் எனப்படும் ஊட்டி மாரியம்மன் தேர் பவனி நேற்று நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் காலை10 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, திருத்தேரில் கலசம் பொருத்தி விழா ஏற்பாடுகளை தொடங்கினர்.

நேற்று காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 9 மணிக்கு விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு அலங்கார பூஜை, சிறப்பு கனகாபிஷேகம் நடைபெற்றன.
அலங்கரிக்கப்பட்ட தேருக்குள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மனின் தேர் பவனி மதியம் 2 மணியளவில் தொடங்கியது.
திரளான பக்தர்கள் முன்னிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் பவனி எம்.எஸ் லைன் வழியாக ஊட்டி காஃபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, லோயர் பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்து லாந்தர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்தது.

அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் உப்பினை தேர் மீது வாரி இறைத்தால் கஷ்டங்கள் கரையும் என்பது நம்பிக்கை. அலையென சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் மீது உப்பு பொட்டலங்களை மழையெனத் தூவி பாரம்பர்ய நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊட்டியில் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்களும் இணைந்து மேற்கொண்டனர். நாளை நடைபெற இருக்கும் விடையாற்றி உற்சவத்துடன் ஊட்டி மாரியம்மன் திருத்தேர் திருவிழா இனிதே நிறைவடைய இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
