இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | ...
``எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்'' - செல்லூர் ராஜூ
மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தால் அனைவரும் வேதனையில் உள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அது குறித்த கேள்விகளை எங்கள் பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். அமித்ஷாவிடம் பேசியதையும், கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பேசியுள்ளார்.
ஒரு முன்னாள் அமைச்சரை தரக்குறைவாகவும், கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலினுக்கு மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
தமிழக மக்கள் இவர் பேச்சை கடுமையாக கண்டித்து வருகிறார்கள், இந்த போக்கை முதல்வர் மாற்றிக் கொள்ள வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீது நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

மதுரை அழகாக காட்சியளிக்க, 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள்தான் காரணம். மன்னர்கள் காலத்திற்குப் பிறகு குடிமராமத்து திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார்.
அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்குத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செய்து வருவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும், மத்திய அரசின் திட்டங்களுக்குதான் திமுக அரசு தனது லேபிளை ஒட்டி வருகிறது" என்றார்.