'எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது' - ஹிமான்ஷி நர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷியின் கருத்து, சமூக வலைதளங்களில் விமரிசனம் செய்யப்படுவதற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப். 22 ஆம் தேதி நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகள் அவரைக் கொல்வதற்கு முன் அவரது மதம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி, "வினய் எங்கிருந்தாலும் அவர் நிம்மதியாக இருக்க வேண்டும். முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதுதான் எங்களின் விருப்பம். யார் மீதும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லீம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பை உமிழ்வதை நான் பார்க்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்'" என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து ஹிமான்ஷியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.
இதையடுத்து ஹிமான்ஷிக்கு எதிரான விமர்சனங்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
"ஒரு பெண்ணை அவருடைய கருத்து வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் கேலி செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. லெப்டினன்ட் வினய் நர்வால் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூக ஊடகங்களில் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது" என்று ஹிமான்ஷிக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.