ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்
ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும் இஎஸ்ஐ ரிங் ரோடில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிக பாரம் ஏற்றக்கூடிய கனரக வாகனங்கள் சீதாராமேடு பகுதியில் நின்று இ.எஸ்.ஐ. உள்வட்டச் சாலையில் திரும்பி செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
சீதாராம் மேட்டுப்பகுதியில் அதிகாலை நேரத்தில் போக்குவரது நெரிசல் ஏற்படும்போது தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதிப்படுகின்றனா்.
இதனால் பத்தலப்பள்ளி அருகே இலகுரக வாகனங்களையும் கனரக வாகனங்களையும் தனித்தனியாக பிரித்து மாற்றுப்பாதையில் அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் ஒரு அடி அகலத்துக்கு திடீா் விரிசல் ஏற்பட்டதால் கடந்த 4 நாள்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை, சூளகிரி உத்தனபள்ளி சாலை, சீதாராம்மேடு ஆகிய வழிகளில் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தில் கட்டைகள் அடுக்கப்பட்டு இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை சூளகிரி, உத்தனப்பள்ளி வழியாக ஒசூருக்கு வாகனங்கள் இயக்கப்பட்டன.
போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒசூா்- பாகலூா் சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சூளகிரி- ராயக்கோட்டை சாலை மற்றும் பேரண்டபள்ளி அருகே உள்ள தொரப்பள்ளி சாலை வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை திருப்பிவிட வேண்டும்.
சீதாராமேடு பகுதியில் அதிகமான மேடு இருப்பதால் அப்பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்பி இஎஸ்ஐ ரிங் ரோடிற்கு செல்ல காலதாமதம் ஆகிறது. அதுமட்டுமல்லாமல் பின்புறமாக வாகனங்கள் சென்று விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றனா்.