ஔரங்கசீப் கல்லறை அழிக்கப்பட வேண்டும்: சிவசேனை எம்.பி.
மகாராஷ்டிரத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை அழிக்கப்பட வேண்டும் என சிவசேனை எம்.பி. மக்களவையில் பேசியுள்ளார்.
மக்களவையில் இன்று (மார்ச் 12) பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய சிவசேனை கட்சியின் தாணே மக்களவைத் தொகுதி உறுப்பினர் நரேஷ் ம்ஹஸ்கே, இந்தியாவில் மொத்தம் 3,691 முக்கிய தளங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) அறிவித்துள்ளதாகவும் அதில் 25 சதவிகிதம் முகலாய மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு உரியது என அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் குல்தாபாத்திலுள்ள முகலாய பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறை பாதுகாப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர் ஔவுரங்கசீப், மகாராஜா சத்ரபதி சம்பாஜியை கொலை செய்ததுடன் ஹிந்துக்களின் கோயில்களை சூரயாடியதாகக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க:சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஔவுரங்கசீப் போன்ற கொடுமைக்காரர்களின் கல்லறை பாதுகாப்பபட வேண்டிய அவசியம் என்ன? அவரை போன்ற இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட அனைவரது நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
முன்னதாக, சமீபத்தில் வெளியான நடிகர் விக்கி கௌஷலின் ‘சாவா’ திரைப்படத்தில் மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள பேரரசர் ஔவுரங்கசீப்பின் கல்லறைக் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.