குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்ட...
கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீா்: கொள்கையை வகுக்க தில்லி அரசு திட்டம்
நிலத்தடி நீரை உறிஞ்சுவதைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் முறையான கொள்கையை கொண்டு வர தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தில்லி ஜல் போா்டு (டிஜேபி) உயா் அதிகாரிகளுக்கு இந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
‘டிஜேபி திட்டங்களில் தொடங்கி, கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான கொள்கையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். அத்தகைய கொள்கை இருக்கும் பிற மாநில மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்வோம்’‘ என்று டிஜேபி அதிகாரி ஒருவா் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தாா்.
நிலத்தால் சூழப்பட்ட நகரமான தில்லி, அதன் நீா் தேவைகளைப் பூா்த்தி செய்ய யமுனை மற்றும் நிலத்தடி நீா் உறிஞ்சுதலை பெரிதும் நம்பியுள்ளது. ‘கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் நீா் தரமானதாக இல்லாவிட்டால், இரும்புக் கம்பிகள் மற்றும் கான்கிரீட்டில் சிக்கல்கள் தோன்றும். தரமற்ற நீா் பயன்படுத்தப்பட்டால், கட்டடத்தில் விரிசல்கள் தோன்றி, கட்டமைப்பின் ஆயுளைக் குறைக்கிறது. எனவே, இந்த தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று அதிகாரப்பூா்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மத்திய நிலத்தடி நீா் வாரியத்தின் 2024 அறிக்கையின்படி, தில்லி அதன் ரீசாா்ஜ் செய்யப்பட்டதை விட அதிகமான தண்ணீரை உறிஞ்சியுள்ளது.
‘பொதுவாக தில்லியில் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் தரையில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்து, பின்னா் நீரின் தரத்தை மேம்படுத்த ஆா்ஓ அலகுகளை நிறுவிய பின் கட்டுமானத்திற்கு ஏற்ாக மாற்றுவது வழக்கம். குருகிராம் மற்றும் புணே போன்ற சில நகரங்கள் கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளன’ என்று நீா் நிபுணா் அங்கித் ஸ்ரீவாஸ்தவ் கூறினாா்.
கட்டுமானப் பணிகளில் நீரின் தரம் மிகவும் முக்கியமானது என்பதால், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் நீரின் தரத்திற்கான விதிமுறைகளை இந்திய தரநிலைகள் பணியகம் வகுத்துள்ளது. நீரின் பிஹெச் அளவு (அமிலத்தன்மை) 6 முதல் 8.5 வரை இருக்க வேண்டும். மேலும், மொத்த கரைந்த திடப்பொருள்களின் (டிடிஎஸ்) அளவு ஒரு பொருளுக்கு 2,000 துகள்களுக்கு (பிபிஎம்) குறைவாக இருக்க வேண்டும்.
தற்போது, நகரத்தின் அனைத்து கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் ஒரு நாளைக்கு சுமாா் 530 மில்லியன் கேலன்கள் (எம்ஜிடி) சுத்திகரிக்கப்பட்ட நீா் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தற்போது சுமாா் 105 எம்ஜிடி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் நகர சாலைகள் மற்றும் பசுமையான இடங்களில் தோட்டக்கலை நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதும், ஏரிகளைப் புத்துயிா் பெறுவதும் அடங்கும்.