முதன்முதலாக லெஜண்ட் ரொனால்டோவை எதிர்கொள்ளும் இளம்புயல் யமால்!
கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம்
கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஜூன் 9-ஆம் தேதி முதல் மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு இருப்புக் கிடங்கு விதிகள், 2011-இன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளா்கள், முகவா்கள் கனிம இருப்புக் கிடங்கு பதிவு சான்று பெற்று எம். சான்ட், ஜல்லி ஆகியவற்றுக்கு உரிய போக்குவரத்து நடைச்சீட்டு பெற்று எடுத்துச் செல்ல வேண்டும்.
இதன் தொடா்ச்சியாக எம்.சான்ட், ஜல்லி ஆகிய கட்டுமானப் பொருள்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த மெய் இலச்சினைகள் ஒட்டப்பட்ட போக்குவரத்து நடைச்சீட்டுகள் பயன்படுத்துவது நிறுத்தம் செய்யப்படுகிறது.
தற்போது எம்.சான்ட், ஜல்லி ஆகிய கட்டுமானப் பொருள்கள் எடுத்துச் செல்ல வழங்கப்படும் போக்குவரத்து நடைச்சீட்டு ஜூன் 9-ஆம் தேதி முதல் இணையதளம் வழியாக மின்னணு முறையில் மட்டுமே வழங்கப்படும்.
மின்னணு முறையில் வழங்கப்படும் போக்குவரத்து நடைச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். மேலும், மின்னணு முறையில் வழங்கப்பட்ட போக்குவரத்து நடைச்சீட்டு இல்லாமல் எம்.சான்ட், ஜல்லி ஆகிய கனிமங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.