டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் புதிய ரக கரும்பு ரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தலைவராக சரத்பவார் இருக்கிறார். துணை முதல்வர் அஜித்பவாரும் இதில் அறங்காவலராக இருக்கிறார்.
இந்நிறுவனம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடம் ஒரு டன் கரும்புக்கு ஒரு ரூபாய் வசூலித்து வருகிறது. அந்த ஒரு ரூபாய்க்கு இப்போது மாநில அரசு முதல் முறையாக கணக்கு கேட்க ஆரம்பித்துள்ளது.

இந்த சர்க்கரை ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடு குறித்து மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில சர்க்கரை கமிஷனர், வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்தில் வசூலிக்கப்படும் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து தணிக்கை செய்ய கமிஷன் அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.
இது குறித்து சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார் கூறுகையில், ''1975-ம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்காகவும், கரும்பு கூட்டுறவு சொசைட்டிகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட வசந்த்தாதா சர்க்கை ஆராய்ச்சி மையத்தை மாநில அரசு களங்கப்படுத்தி இருக்கிறது. இது பா.ஜ.கவின் கீழ்த்தரமான அரசியலை காட்டுகிறது.
முதல்வரின் செயல் வழக்கமான ஒன்றாக தெரியவில்லை. இதற்கு முன்பு தானேயை குறி வைத்தார்கள். இப்போது பாராமதியை குறிவைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசின் ஊழலுக்கு எதிரான சாட்சியங்களை கொடுக்கும்போது அரசு அமைதியாகிவிடுகிறது'' என்று குறிப்பிட்டார்.

ஆனால் விசாரணை நடத்த உத்தரவிடவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அந்நிறுவனத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அப்படி புகார் வந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படலாம். சர்க்கரை ஆலைகளிடமிருந்து ஒரு டன்னுக்கு ஒரு ரூபாய் வசூலித்து அதனை என்ன செய்தீர்கள் என்று மட்டும் விளக்கம் கேட்டுள்ளோம்''என்று தெரிவித்தார்.
சர்க்கரை கமிஷனர் சஞ்சய் கோல்தே கூறுகையில், ''வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்திற்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. ஆனால் அமைச்சரவையின் வேண்டுகோளின்படி சர்க்கரை ஆலைகளிடம் வசூலிக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறார்கள் என்பது குறித்து தணிக்கை செய்ய கமிட்டியை அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன்'' என்றார்.















