நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனு...
SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்
தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கான ஆணை வழங்குபட்டது. தொடர்ந்து வீடு கட்டபட்டு வருகிறது. வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு. குடிசைக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டவேண்டும், குடிசை இல்லா தமிழகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். வருவாய்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொறுப்பேற்ற பின்னர் 10.71 லட்சம் பேருக்கு இலவச வீடுமனை, 9 லட்சம் பேருக்கு புதியதாக முதியர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் 4 லட்சம் பேருக்கு அரசின் சான்றிதழ்கள் வழங்கபடாமல் இருந்ததை அவர்களுக்கு வழங்கியது தான் அவரின் சாதனை. நமது ஆட்சி அமைந்த பின்னர் தமிழகம் அனைத்து துறைகளும் முன்னேறிவருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் ஆட்சி நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பல அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறேன்.

தென்காசியில் ரூ.141 கோடியில் முடிவுற்ற பணிகள் திறக்கப்பட்டுள்ளது. ரூ. 291 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் தான் ஆட்சியின் மீது மக்களுக்கு ஒரு இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியின் மீது நாள்தோறும் ஏதோ ஒரு அவதூறு பரப்பபடுகிறது. எதிர்கட்சித் தலைவர் விரக்தியின் உச்சத்தில் போய் பேசுகிறார். விவசாயிகள் பாடுபட்டு உருவாக்கிய ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது என அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போது பாசனப் பரப்பு அதிகரத்துள்ளது. நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. 4 ஆண்டுகளில் 1 கோடியே 70 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு சரசரியாக 42 லட்சத்து 61 ஆயிரத்து 336 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் சரசரியாக ஆண்டுக்கு 27 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
அக்டோபர் ஒன்றாம் தேதியை நெல் கொள்முதல் செய்யும் நாளாக வைத்திருந்தது அ.தி.மு.க ஆட்சி. ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எடப்பாடியிடம் பொய்யையும் துரோகத்தையும் தவிர வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. தினமும் ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செயப்படுகிறது.

எதுவும் தெரியாமல் விவசாயி என சொல்லும் பழனிசாமி வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் 2 ஆண்டுகள் விவசாயிகள் போராடியதைக் கொச்சைபடுத்தி வந்தார். 3 வேளான் சட்டத்திற்கு எதிராக தி.மு.க அரசு தான் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்தது. மழை நீர் சூழ்ந்த பகுதியில் வெள்ள நிவாரன முகாம் அமைக்கப்பட்டது. நாள்தோறும் மழைபாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைப்பாதிப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்துக்கும் போர்கால தயாரிப்போடு அரசு உள்ளது. 3 முறை இயற்கை பேரிடர்களை இந்த அரசு சந்தித்துவிட்டது. மழை வெள்ள பாதிப்புக்காக ரூ.37 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டும் கொடுக்கவில்லை. மத்திய அரசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மக்களுக்கான அரசாக அனைத்தையும் செய்து வருகிறது.
என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கமுடியவில்லை. இப்போது தேர்தல் ஆணையம் மூலம் சிறப்புத் தீவிர வாக்குத் திருத்த மசோதா என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஏற்கெனவே பீகாரில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். பா.ஜ.க-வின் தோல்வி உறுதியானதால் வாக்காளர்களையே நீக்கத் துணிந்தனர். அதே பார்முலாவை தமிழகத்திலும் கொண்டுவரப் பார்க்கின்றனர்.

தொடக்கம் முதலே இதனை உணர்ந்து எதிர்த்து வருகிறோம். நம்மோடு கேராளாவும் இணைந்துள்ளது. வாக்குப் பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2 ல் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டபட்டுள்ளது. ஜனநாயக்த்தின் அடித்தளம் வாக்குரிமைதான் அதனை ஒருபோதும் விட்டுகொடுக்கமாட்டோம். மக்களாட்சியைக் காக்கும் இந்த முன்னெடுப்பில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கவேண்டும். இயற்கைப் பேரிடராக இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் சதித் திட்டமாக இருந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதே திராவிட மாடல் அரசு” என பேசினார்.
















