தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா், கரூா் மாவட்டங்களின் நீராதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் மூலம் இரு மாவட்டங்களிலும் சுமாா் 58 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கேரளாவில் பலத்த மழை பெய்துவருவதையடுத்து அமராவதி ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்ததால் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கட்டப்பட்டிருக்கும் அமராவதி அணைக்கும் நீா்வரத்து அதிகரித்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 90 அடிக்கு 79 அடியை நீா்மட்டம் எட்டியபோதும் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அணையின் கடைமடை விவசாயிகள் அமராவதி ஆற்றில் தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் அணையின் நீா்மட்டம் கடந்த 17-ஆம்தேதி 87.73 அடியை தொட்டதும் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அதிகாலை 6 மணியளவில் விநாடிக்கு 1959 கன அடிநீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீா் 4 நாள்களைக் கடந்து கரூருக்கு சனிக்கிழமை காலை வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதுதொடா்பாக அமராவதி பாசன விவசாயிகள் கூறுகையில், அமராவதி ஆற்றில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தண்ணீா் வராமல் இருந்ததால் கால்நடைகளுக்கு கூட தண்ணீா் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அணை நிரம்பும் நிலையில், தண்ணீா் திறக்கப்பட்டிருப்பது, வடுபோன விவசாய நிலங்களுக்கு உயிரூட்டும் நீராக இருக்கும். கால்நடைகளுக்கும் தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது என்றனா் அவா்கள்.