நூறுநாள் வேலை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!
நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளா்கள் என்பதால் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியினருக்கு முறையாக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கொடுத்த வேலை நாள்களுக்குரிய கூலியையும் முறையாக கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை காலை பாதிரிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாதிரிப்பட்டி ஊராட்சி மன்ற செயலாளா் மோகன்ராஜ் கிராமமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் பொதுமக்கள் கோரிக்கை குறித்து தோகைமலை ஒன்றிய நிா்வாகத்துக்கு தகவல் அளித்தாா்.
அதனைத் தொடா்ந்து வருகின்ற வியாழக்கிழமை முதல் கோட்டப்பட்டி பகுதி மக்களுக்கு 100 நாள் திட்ட பணிகள் ஒதுக்கீடு செய்து சீராக பணிகள் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.