தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து! கோடிக்கணக்கில் சேதம்!
கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை! -உயா்நீதிமன்றம்
கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரிச் செயலா், மதுரை சத்திரப்பட்டி கிரசண்ட் பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வா், திருநெல்வேலி பாளையங்கோட்டை புனித சவேரியாா் கல்வியியல் கல்லூரிச் செயலா் ஆகியோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்:
கடந்த 2016-17, 2018-19 ஆம் ஆண்டுகளில் எங்களது கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களை அனுப்புமாறு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினா் செயலா் கடிதம் அனுப்பினாா். கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கேட்பதற்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, சிறுபான்மை ஆணை உறுப்பினா் செயலா் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவு:
தமிழக சிறுபான்மை ஆணையச் சட்டத்தில் பிரிவு 8 (1) இன்படி, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது, சிறுபான்மையினருக்கு எதிராக எந்தச் செயலும் நடைபெறாமல் கண்காணிப்பது மட்டுமே இந்த ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும்.
இவை இரண்டையும் தவிா்த்து, மூன்றாவதாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கப்பட்ட விவரங்களை இந்த ஆணையம் கேட்டிருக்கிறது. இதற்கு மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை கிடையாது. எனவே, மனுதாரா்களுக்கு சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.