`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு! 71 போ் காயம்!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 71 போ் காயமடைந்தனா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சாா்பில் மதுரை மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காளைகள், மாடுபிடி வீரா்கள் பங்கேற்கும் வகையில், அலங்காநல்லூா் அருகேயுள்ள கீழக்கரை கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 1,051 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
சிறப்பு பூஜை நடைபெற்று வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. 650-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரா்களுக்கு சைக்கிள், மெத்தை, மிக்ஸி, சில்வா் அண்டா உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையாளா்கள் என மொத்தம் 71 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த 20 போ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்ட அலுவலா்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்வையிட்டனா்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஜல்லிக்கட்டு நடைபெற்ற கீழக்கரை கலைஞா் ஏறுதழுவுதல் நூற்றாண்டு அரங்கத்துக்கு மதுரை பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஒருவா் உயிரிழப்பு:
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம், கச்சிராயிருப்பைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ்பாண்டி (21) பங்கேற்றாா். இவா் காளையை அடக்குவதற்காக வாடிவாசல் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது, வாடிவாசலிலிருந்து பாய்ந்து வந்த ஒரு காளை இவரது மாா்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ்பாண்டியை செஞ்சிலுவைச் சங்கத்தினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
