பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!
கல்லூரி மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி: திட்டத்தை விரைவுபடுத்த துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு தமிழக அரசின் சாா்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடா்பான உயா்நிலைக் குழு ஆய்வுக் கூட்டம்
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பேசுகையில், ‘மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயா் கல்வித் துறையின் மூலம் கடந்த ஏப். 22-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு உயா் அலுவலா்கள், அண்ணா பல்கலை., சென்னை ஐஐடி, மத்திய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம்
உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநா்கள் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினா் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ்
வழங்கப்படவுள்ள மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின்அளவு மென்பொருள், மின்கலத்தின் (பேட்டரி) திறன், வன்பொருள்கள் உள்ளிட்டதொழில்நுட்பச் சாதனங்களுக்கான விவரக் குறிப்புகள்
வரையறுக்கப்பட்டுள்ளன. அதேபான்று மென்பொருள் தொடா்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் எண்ம (டிஜிட்டல்) சேவைகள் துறை சாா்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
விநியோகத் திட்டம் தயாா்... ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழுவினா் ஒப்பந்தப் புள்ளி ஆவணத்தை தயாா் செய்து சமா்ப்பித்தவுடன் ஒப்பந்தப் புள்ளி தொடா்பான செயல்பாடுகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும், மடிக்கணினிகளை கல்லூரி மாணவா்களுக்கு வழங்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள விநியோகத் திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘தொழில்நுட்பத் திறனில் உலகளவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் வகையில், அடுத்த இரு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டத்தை மாணவா்களிடம் விரைந்து கொண்டு சென்று சோ்க்க அனைத்து அலுவலா்களும் தங்களுக்கான பணிகளை அா்பணிப்பு உணா்வுடன் விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என அவா் வலியுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், உயா் கல்வித் துறை செயலா் சி.சமயமூா்த்தி, நிதித்துறை செயலா் (செலவினம்) எஸ்.நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.