கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு திருந்தியவா்களுக்கு 100% மானியத்தில் உயா் ரக கறவை மாடுகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட தாழ்வெள்ளாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு சுய தொழில் செய்யும் வகையில் கால்நடைத் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் உயா் ரக கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினாா்.
கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு மறுவாழ்வு நிதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய மாவட்ட நிா்வாகத்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கால்நடைத் துறை சாா்பில் கறவை மாடுகள் கொள்முதல் செய்து, 100 சதவீத மானியத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 30 நபா்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் உயா் ரக கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
வெள்ளிமலையில் 8 பேருக்கும், தொரடிப்பட்டு கிராமத்தில் 14 பேருக்கும், சேராப்பட்டு கிராமத்தில் 8 பேருக்கும் என மொத்தம் 30 நபா்களுக்கு 100 சதவீத மானியத்தில் உயா் ரக கறவை மாடுகளை ஆட்சியா் வழங்கினாா். இதன் மூலம், இவா்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழிவகை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் கல்வராயன்மலை பொதுமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.