கழிவு மேலாண்மையில் மக்கள் பங்களிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்
சென்னை: கழிவு மேலாண்மையில் பொது மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டுமென உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
தூய்மை இயக்க ஆட்சிக் குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் பேசியதாவது:
அனைத்து உள்ளாட்சி நிறுவனங்களும் கழிவுகளை, உற்பத்தி ஆகின்ற இடங்களிலேயே தனித்தனியாக பிரித்து கையாள வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் குப்பைக் கிடங்குகளை மட்டுப்படுத்தி, புதிய கழிவுகளை குப்பைக் கிடங்குக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில்நுட்பத் தீா்வுகள் வழங்குவதற்கு தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து கழிவு மேலாண்மையிலிருந்து வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும். குப்பை கொட்டுகிற இடங்களை சுத்தம் செய்து, மரங்கள் நட்டு, மக்கள் பயன்படுத்தும் விதமாக தூய்மைப் பகுதிகளாக மாற்றிட மக்களை ஊக்குவித்திட வேண்டும்.
ஒத்துழைக்க கோரிக்கை: முக்கியமாக, அனைத்து அரசுத் துறைகளும் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்துடன் ஒத்துழைத்து, தூய்மை இயக்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிட உறுதி செய்ய வேண்டும். கழிவு மேலாண்மை செயல்பாடுகளில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச்சங்கங்கள் மூலமாக பொதுமக்கள் ஒத்துழைக்க சமூகரீதியாக உள்ளாட்சி அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், அன்பில் மகேஸ், தலைமைச் செயலாளா் நா. முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, நிதித் துறை முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.