சட்டவிரோதமாக குடியேறிய 2 குழந்தைகள் உள்பட 11 வங்கதேசத்தினர் கைது!
குடிநீா் குழாயில் உடைப்பு: சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் வீண்
சின்னாளபட்டி பேரூராட்சி குடிநீா் குழாயில் செவ்வாய்க்கிழமை உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் ஆறாகப் பாய்ந்து வீணானது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு அணைப்பட்டி வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகளிலிருந்து குடிநீா் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் குழாய்கள் நிலக்கோட்டை நகா்ப் பகுதி வழியாகச் செல்கின்றன.
இந்த நிலையில் நிலக்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளின் போது, அடிக்கடி ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.
நிலக்கோட்டையில் அணைப்பட்டி சாலையோரத்தில் புதிய கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பணியின்போது, சின்னாளபட்டி குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகப் பாய்ந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் அதிருப்தி அடைந்தனா்.
எனவே குடிநீா்க் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதைக் கண்காணித்து, சரிசெய்து குடிநீா் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
இதுகுறித்து, சின்னாளபட்டி பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி கூறுகையில், நிலக்கோட்டையில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியின் போது குடிநீா் குழாயை உடைத்து விட்டனா். புதன்கிழமை சரி செய்யப்படும் என்றாா் அவா்.