Sri Brinda AC : 'அப்பெல்லாம் படங்கள் சாதாரணமா ஓடிடும்' - மூடப்பட்ட வடசென்னை பிருந்தா தியேட்டர் இனி.?
அடுத்த மாதம், அதாவது வரும் ஏப்ரல் 14ம் தேதியுடன் நாற்பதாவது ஆண்டை பூர்த்தி செய்ய இருந்த நிலையில் திடீரென தன் பயணத்தை நிறுத்தியிருக்கிறது வடசென்னையின் முதல் ஏசி தியேட்டரான பெரம்பூர் ஶ்ரீ பிருந்தா ஏசி டீலக்ஸ் திரையரங்கம்.
டிராகன் - கடைசிப் படம்
சில தினங்களுக்கு முன் தென் சென்னையின் பிரபலமான உதயம் தியேட்டர் மூடப்பட்ட நிலையில் தற்போது ஶ்ரீபிருந்தா திரையரங்கம் மூடப்படவுள்ளது.
தற்போது 'டிராகன்' ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த திங்கள் கிழமையுடன் தியேட்டர் மூடப்பட்டதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.
தியேட்டரின் மேலாளர் பன்னீர்செல்வததிடம் பேசினோம்.
''1984ம் வருஷம் ஏப்ரல் மாசம் தமிழ்ப் புத்தாண்டு அன்னைக்க்குத் திறந்த தியேட்டர்ங்க. நிறுவனர் பெயர் லோகநாதன் செட்டியார். அவருக்கு ஐந்து பையன்கள். செட்டியாரும் மகன்கள்ல ரெண்டு பேரு இப்ப இல்லை, மத்த மூணு பிள்ளைகள்தான் நிர்வாகத்தைக் கவனிச்சிட்டு வர்றாங்க. திறந்த பத்தாவது நாள்ல நான் இங்க வேலைக்குச் சேர்ந்தேன். இந்த ஏப்ரல் வந்தா சரியா 40வது வருஷம் முடியுது.
இப்பவும் திறப்பு விழா கண் முன்னாடியே நிக்குது. அப்ப செய்தித்துறை அமைச்சரா இருந்த ஆர்.எம்.வீரப்பன் தியேட்டரைத் திறந்து வைக்க, முதல் காட்சியைத் துவக்கி வச்சார் நடிகர் ரஜினிகாந்த்.

'ரஜினி தியேட்டர்'
அவர் திறந்து வச்சதாலேயோ என்னவோ, தியேட்டரை 'ரஜினி தியேட்டர்'னே மக்கள் கூப்பிடத் தொடங்கிட்டாங்க. தவிர, இந்தப் பகுதியில் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் அதிகம்கிறதாலயும் ரஜினி படங்கள் வெளியானா ஏரியாவே திருவிழாக் கோலம் பூண்டுடும்.
மாப்பிள்ளை படம் 200 நாட்களைத் தாண்டி ஓடுச்சு. அண்ணாமலை உள்ளிட்ட நிறையப் படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடுச்சு. அப்பெல்லாம் சாதாரணமா ஓடிடும். படம் ஓடிட்டிருக்கிறப்ப ரஜினி சார் குடும்பத்துடன் சப்ரைஸ் விசிட் வந்ததெல்லாம் நடந்திருக்கு.
தொண்ணூறுகள்ல சேட்டிலைட் சேனல்களின் வரவுக்குப் பின்னாடியே தியேட்டர் பிசினஸ் இறங்கத் தொடங்குச்சுன்னு சொல்லலாம்.
கால மாற்றம்னு ஒண்ணு இருக்கில்லையா? 250 நாட்களுக்கு மேல் படங்கள் ஓடின இதே தியேட்டர்ல ரஜினி நடிச்சு ஷங்கர் இயக்கிய எந்திரன் 50 நாட்களுக்கு மேல ஓடலை.

சிங்கிள் ஸ்க்ரீன்னாலும் ஆயிரத்துக்கும் மேல இருக்கைகள், 15 கிரவுண்ட் இடம்னு வடசென்னையின் அடையாளமா இருந்த தியேட்டரில் கொரோனாவுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிசினஸ் டல்லாகத் தொடங்குச்சு.
இருந்தாலும் இழுத்துப் பிடிச்சு ஓட்டிட்டிருந்தோம். ஒருகட்டத்துல பராமரிப்பு, வேலை செய்திட்டிருக்கிற ஊழியர்களின் ஊதியம்னு எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா நஷ்டம்கிற நிலை வந்திடுச்சு.

சரியா இப்படியான ஒரு சூழல் வந்தப்ப கட்டுமான நிறுவனம் ஒண்ணும் தியேட்டரை விலைக்குக் கேட்க, செட்டியாரின் பிள்ளைகள் தியேட்டரை விற்கிற முடிவை எடுத்திருக்காங்க.
அவங்களுக்கு மட்டுமல்ல இங்க வேலை பார்த்த ஒவ்வொரு பணியாளருக்குமே ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.
ஆனா வேறு வழி இல்லாததால் இந்த முடிவை எடுக்க வேண்டியதாகிடுச்சு'' என்கிறார் இவர்.
தியேட்டரை வாங்கியிருக்கும் கட்டுமான நிறுவனம் இந்த இடத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளை அமைக்கவிருக்கிறதாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
