இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | ...
`குழந்தை பராமரிப்பு விடுப்பு' - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு; உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
ஜார்க்கண்டைச் சேர்ந்த கூடுதல் மாவட்ட நீதிபதியான காஷிகா கோரிய குழந்தை பராமரிப்பு விடுப்பை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, நீதிபதிக்கு 92 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கியுள்ளது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்.
கூடுதல் மாவட்ட நீதிபதியான காஷிகாவின் குழந்தை பராமரிப்பு விடுப்புக்கான கோரிக்கையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
மனுதாரரான பெண் நீதிபதி, பட்டியலின பிரிவைச் சேர்ந்த ஒற்றைப் பெற்றோராவார். ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, சுமார் 194 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு கோரியிருந்த நீதிபதியின் கோரிக்கையை எந்த சரியான காரணமும் தெரிவிக்காமல் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

குழந்தை பராமரிப்பு விதிகளின்படி, மனுதாரருக்கு சுமார் 730 நாள்கள் விடுப்பு எடுக்க உரிமையிருக்கிறது. ஆனால், நீதிபதி கோரிய 6 மாத கால விடுப்பு நிராகரிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், பாதிக்கப்பட்ட நீதிபதி காஷிகா, ஜார்க்கண்ட் நீதிமன்றத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.
நீதிபதி காஷிகா தொடர்ந்த வழக்கு, நீதிபதி பிரசாந்த் குமார் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை மே 29 அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜார்க்கண்ட் நீதிமன்றத்துக்கு இதுகுறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இன்று வழக்கு தொடர்பாக நீதிபதி காஷிகா தாக்கல் செய்திருந்த இடைக்கால மனு விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து பேசிய மனுதாரரான நீதிபதி காஷிகா தரப்பு வழக்கறிஞர், "194 நாள்களுக்கு மனுதாரர் விடுப்பு கோரிய நிலையில், வெறும் 92 நாள்கள் மட்டுமே விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி காஷிகா உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தவுடனே அவரது வருடாந்திர பதிவேடான ACR-ல் குழப்பமான உள்ளீடுகள் பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. பட்டியலின பிரிவைச் சேர்ந்த நீதிபதி காஷிகா, ஏராளமான வழக்குகளை முடித்து வைத்துள்ளார்; அவர் சிறப்பாகச் செயல்படும் நீதிபதியாவார்.

அவரது ACR-ல் உள்ள சில திடீர் குழப்பமான உள்ளீடுகள் குறித்து மே 23 அன்று செயல்திறன் ஆலோசனை என தெரிவிக்கப்பட்ட நிலையில், 4660 வழக்குகளை முடித்து வைத்துள்ள அவரது செயல்திறனைப் தரவுகளைக் கொண்டு பாருங்கள்" என கூறி நீதி வேண்டி நின்றார்.
மனுதாரருக்கு பதிலளித்த எதிர்மனுதாரான ஜார்க்கண்ட் நீதிமன்ற தரப்பு வழக்கறிஞர், "2026 ஆம் ஆண்டில் நடைபெறும் 16 வயது குழந்தையின் தேர்வுக்காக விடுப்பு கோரி இடமாற்றம் செய்யப்பட்ட உடனேயே பிரிவு 32 இன் கீழ் நீதிபதி காஷிகா ரிட் தாக்கல் செய்துள்ளார்.
காஷிகாவின் முதல் கடிதத்தில், குழந்தை பராமரிப்பு குறித்த எந்த குறிப்பும் தெரிவிக்கப்படவில்லை; அவர் ராஞ்சி அல்லது பொகாரோவிற்கு இடமாற்றம் மட்டுமே கோரியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் ஜூன் 6 ஆம் தேதி உத்தரவைப் பொறுத்து, நாங்கள் ஏற்கெனவே 94 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கிவிட்டோம். அது நீதிபதி காஷிகாவை மகிழ்ச்சியாக்க வேண்டும்.
நீதிபதியின் சேவை காலத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த விடுப்பு 720 நாள்கள் மட்டுமே. நீதிபதிகள் எட்டு மாத கால தொடர் விடுப்பில் சென்றால், மாவட்டத் தலைவர் இல்லாதபோது வழக்குகளை தீர்ப்பதில் சிக்கல் உண்டாகும்" என தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கவனித்த உச்ச நீதிமன்றம், "நீதிபதிக்கு 92 நாள்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு தொடரட்டும். இதற்கிடையில், எதிர்மனுதாரர் தரப்பில் அடுத்த நான்கு வாரங்களுக்குள் பதிலாக எதிர்மனு தாக்கல் செய்யட்டும்" என கூறியது.
அப்போது பேசிய மனுதாரரின் வழக்கறிஞர், "தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்பின் காரணமாக நீதிபதியின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படாமல் வழங்கப்படுவதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்" என கோரினார். அதற்கு "யாரும் சம்பளத்தை வைத்திருக்கவில்லை" என பதிலளித்தார் எதிர் தரப்பு வழக்கறிஞர் சின்ஹா. இந்த வழக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அடுத்து விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs