கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
"தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி, கூட்டணி கட்சிகளின் ஆட்சி. எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.
மத்திய அரசு நிதிகளை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். அது எந்த திட்டமாக இருந்தாலும் சரி, மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்திவிட்டு, தாங்களே செய்ததாகக் கூறுகிறார் முதல்வர். தமிழக அரசின் திட்டங்களில் 70% மத்திய அரசின் நிதிதான்.
திமுகவினர் தமிழ், தமிழ் பண்பாட்டை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழ், தமிழ் பண்பாட்டை வைத்து அரசியல் செய்வது இந்த காலத்தில் எடுபடாது; பண்டைய கால செயல் முறை இப்போது எடுபடாது.
கீழடியைப் பொருத்தவரை ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சான்றுகள் தேவைப்பட்டுள்ளது. அவ்வளவுதானே தவிர, அதை வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், சரஸ்வதி நதி பற்றி பேசுகிறார். அவர் எப்போதுமே தமிழக மக்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறி தமிழ்நாட்டிற்கு, தமிழுக்கு தொண்டு செய்வது போல காட்டிக்கொண்டு அவர்களது ஆட்சியை கொண்டுவருவதுதான் வழக்கமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் நிச்சயமாக அது எடுபடாது" என்று தெரிவித்தார்.