What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ...
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
கூடலூரில் உறவுப் பெண்ணுடனான தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா்(40). இவரது மனைவி வைஷ்ணவி(32). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த உறவினரான ஜெயச்சந்திரனுக்கும் (30) தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த வைஷ்ணவி, ஜெயசந்திரனுடன் இணைந்து கழுத்தை நெரித்து அருண்குமாரை கடந்த 2021, ஏப்ரல் 23-ஆம் தேதி கொலை செய்தனா்.
இதையடுத்து, கூடலூா் தெற்கு போலீஸாா் வைஷ்ணவி, ஜெயச்சந்திரன் ஆகியோரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே, வைஷ்ணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயசந்திரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.