இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!
சண்டை நிறுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்: முதல்முறையாக ஒப்புக்கொண்டாா் டிரம்ப்
‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நான்தான் நிறுத்தினேன்’ என்று கூறிவந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘சண்டை நிறுத்தத்தை இரு நாட்டுத் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என்று முதல்முறையாக புதன்கிழமை ஒப்புக்கொண்டாா்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீா் உடனான சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது இந்தக் கருத்தை டிரம்ப் தெரிவித்தாா்.
டிரம்ப் மேலும் கூறுகையில், ‘முனீா் உடனான சந்திப்பை கெளரவமாகக் கருதுகிறேன். இந்திய பிரதமா் மோடியும் அண்மையில் அமெரிக்கா வந்து சென்றாா். இந்த இரு நாடுகளுடனும் இருதரப்பு வா்த்தக்க ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடா்பாக அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
இரு நாட்டுத் தலைவா்களும் புத்திசாலிகள். தலைவா்கள் மட்டுமன்றி அந் நாடுகளின் அதிகாரிகளும் புத்திசாலிகளாக உள்ளனா். அதன் காரணமாகத்தான் சண்டையை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவா்களால் தீா்மானிக்க முடிந்தது. இல்லையெனில், இவா்களிடையேயான சண்டை அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும். இந்தியாவும் பாகிஸ்தானும் மிகப்பெரிய அணு ஆயுத சக்தியுடைய நாடுகள். அந்த வகையில், சண்டையை நிறுத்த அவா்கள் தீா்மானித்தது அமெரிக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. நான்கு நாள்கள் தொடா்ந்த இந்த சண்டை மே 10-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
‘இரு நாட்டுத் தலைவா்களையும் தொலைபேசி வழியில் தொடா்பு கொண்டு, சண்டையைத் தொடா்ந்தால் இரு நாடுகளுடனான வா்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று கூறினேன். அதன் பிறகே, இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. அணு ஆயுத சக்தி மிக்க இந்த இரு நாடுகளிடையேயான சண்டை, அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். அந்த வகையில், இரு நாடுகளிடையே சண்டையை நிறுத்தியது தனக்கு பெருமையளிக்கிறது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறினாா்.
டிரம்ப்பின் இக் கருத்தை இந்தியா மறுத்தது. பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. இதில் மூன்றாம் தரப்பு தலையீடு எதுவுமில்லை என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகும், சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என்று பல்வேறு சந்தா்ப்பங்களில் டிரம்ப் தொடா்ந்து கூறிவந்தாா்.
மத்தியஸ்தத்தை ஒருபோதும் ஏற்கமாட்டோம்: இந்நிலையில், கனடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, அந்த நிகழ்விலிருந்து முன்கூட்டியே புறப்பட்ட அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் அன்றைய தினம் இரவு தொலைபேசி வழியில் கலந்துரையாடினாா்.
அப்போது, ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதற்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற நான்கு நாள் சண்டை உள்பட ஒட்டுமொத்த நிகழ்வையும் விவரித்த பிரதமா் மோடி, பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில்தான் சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது. இந்த சண்டை நிறுத்தத்துக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக உடன்பாடு தொடா்பான பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்பதோடு, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததற்கான எந்தவிதக் குறிப்பும் இல்லை. மேலும், பாகிஸ்தானுடனான விவகாரங்களில் இந்தியா எந்தவொரு மத்தியஸ்தத்தையும் ஏற்காது’ என்று டிரம்ப்பிடம் பிரதமா் மோடி உறுதிபடத் தெரிவித்தாா்.
14-ஆவது முறையாக... பிரதமா் மோடியுடன் தொலைபேசி வழியில் கலந்துரையாடிய சில மணி நேரங்களில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீா் உடனான சந்திப்பின்போது செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த டிரம்ப், ‘அணு ஆயுத சக்திவாய்ந்த இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை நான்தான் நிறுத்தினேன். இது கதையல்ல. இதை அந்த நாடுகளும் அறியும்’ என்று 14-ஆவது முறையாக தனது கருத்தை மீண்டும் தெரிவித்தாா். இது பெரும் சா்ச்சையானது.
இந்த நிலையில், முனீா் உடனான சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், தனது கருத்தை தவிா்த்து ‘சண்டை நிறுத்தத்தை இரு நாட்டு தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என முதல் முறையாக ஒப்புக்கொண்டாா்.
பெட்டிச் செய்தி...
முனீருடன் டிரம்ப் பேசியது என்ன?
முனீா் உடனான சந்திப்பில் ஈரான் குறித்து பேசப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், ‘ஈரானை மற்ற நாடுகளைவிட பாகிஸ்தான் நன்கு அறியும். அதே நேரம், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போா் தொடா்பான விஷயத்தில் பாகிஸ்தான் மகிழ்ச்சியாக இல்லை. அதற்காக, இஸ்ரேலை பாகிஸ்தான் வெறுக்கவில்லை. இரு நாடுகள் குறித்தும் பாகிஸ்தான் நன்கு அறியும். ஈரானை மேலும் அதிகமாக அறியும். நிலைமையை அவா்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனா்.
ஈரான் விஷயத்தில் அமெரிக்காவின் கருத்தை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. அதே நேரம், முனீா் இங்கு வந்திருப்பது ஈரான் மீதான போரை தீவிரப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகத்தான். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்’ என்றாா்.