சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் தனக்கே அதிகாரம் என்று இருவரும் மாறிமாறி கூறுவதால் கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.
தொடர்ந்து தனது வீட்டில் யாரோ ஒட்டுக்கேட்கும் கருவி வைத்துள்ளதாகவும் அது லண்டனில் இருந்து வந்தது என்றும் ராமதாஸ் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தளக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். அதன் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் தனது மனுவில் கூறியுள்ளார்.