சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹா...
'சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு ஒரு கண்துடைப்பு' - திருமாவளவன்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு கண்துடைப்பு எனவும் பிகார் தேர்தல் ஆதாயம் கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் தெரிவித்ததாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிரும் பாஜக அரசு 2029-ல் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறது. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2031 நடைபெறும் நிலை இருக்கிறது. 2021-ல் நடைபெற வேண்டியது. ஆனால் கரோனா காரணமாக நடைபெறவில்லை. அடுத்து 2031 ஆம் ஆண்டுதான் காலக்கெடு வருகிறது.
2031ல் பாஜக ஆட்சி இருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. 2029 பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் அது உறுதியாகும். இந்த நிலையில் இப்போது இவர்கள் இந்த அறிவிப்பை செய்திருப்பது ஒரு கண்துடைப்பாகத்தான் தெரிகிறது. பிகாரில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு முதன்மையான பேசுபொருளாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை அமைச்சரவையின் மூலம் பாஜக அரசு அறிவித்திருக்கிறது. அவர்கள் நம்முடைய நிலைப்பாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அதனை வரவேற்கிறோம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கட்சிகள் மாநில அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் இருக்கிறது என்பதை விசிக சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. மத்திய அமைச்சர் வைஷ்ணவ் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் மாநில அரசுதான் இதை மேற்கொள்ள வேண்டும் என சொன்னவர்கள் இப்போது எந்த கருத்தையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்துகிற பாஜக அரசை கண்டித்து வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். பஹல்காம் நகரில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலை மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு விரைந்து தாயகம் திரும்பியவர் தில்லிக்கு வந்து அமைச்சர்களோடு கலந்தாய்வு நடத்திவிட்டு பிகாருக்கு சென்றுவிட்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த பயங்கரவாத படுகொலையை யாராலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரமாக கண்டிக்கிறோம். அதன் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதைக் காரணம் காட்டி நாட்டில் ஒரு பதற்றத்தை பாஜகவினர் உருவாக்கி வருகிறார்கள்.
பாஜக அரசு, பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்கிற வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். சிந்து நதியை பாகிஸ்தான் பயன்பாட்டிற்கு விடமாட்டோம், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், சிந்து நதி பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டால் நாங்கள் இந்தியா மீது போர் தொடுப்போம் என்று சொல்லக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை. ஆனால் அதற்கு ஒரு போர் தேவையா? என்கிற சூழலை உருவாக்க வேண்டுமா? என்பதை மத்திய அரசு கவனத்தில்கொள்ள வேண்டும் என்றார்.