சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது.
இதையும் படிக்க: ஆட்டத்தின் சூழல்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஷ்ரேயாஸ் ஐயர்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முதல் இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்த சஹால், அவரது மூன்றாவது ஓவரில் மாயாஜாலம் செய்தார்.
19-வது ஓவரை வீசிய அவர், அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கேப்டன் தோனியை ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின், தீபக் ஹூடா, அன்ஷுல் கம்போஜ் மற்றும் நூர் அகமதின் விக்கெட்டினை தொடர்ச்சியாக வீழ்த்தி ஐபிஎல் தொடரில் அவரது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டினைப் பதிவு செய்தார்.
ரகசியம் பகிர்ந்த சஹால்
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியதன் ரகசியத்தை யுஸ்வேந்திர சஹால் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எம்.எஸ்.தோனி மற்றும் ஷிவம் துபே இருவரும் களத்தில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்னால் இந்த ஓவரில் விக்கெட் எடுக்க முடியும் என்ற உணர்வு இருந்தது. என்னுடைய பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பார்களா, மாட்டார்களா என்பது குறித்தெல்லாம் அதிகம் சிந்திக்கவில்லை. லைன் அண்ட் லென்த்தினை மாற்றி என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த திட்டமிட்டேன். அதனையே செயல்படுத்தினேன் என்றார்.
நேற்றையப் போட்டியில் 3 ஓவர்களை வீசிய யுஸ்வேந்திர சஹால் 32 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.