அரைசதம் விளாசிய ரோஹித், ரிக்கல்டான்; ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!
ரோஹித் சர்மா, ரிக்கல்டான் அரைசதம்
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். மும்பை அணி 116 ரன்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தது. ரியான் ரிக்கல்டான் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய இருவரும் தலா 48 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் 48 ரன்களும் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர்.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.