முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்!
முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் (79), குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனது வீட்டில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி பூஜையின் போது ஆரத்தி காட்டியதில் ஏற்பட்ட தீ விபத்தில் கிரிஜா வியாஸ் பலத்த தீக்காயமடைந்தார். அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடுமையான தீக்காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரின் சகோதரர் கோபால் சர்மா தெரிவித்தார். அவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை உதய்பூரில் நடைபெறும் என்று சர்மா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் அனுபவமிக்க தலைவரான கிரிஜா வியாஸ், மாநில மற்றும் மத்திய அரசுகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கை முழுவதும், காங்கிரஸில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ள கிரிஜா வியாஸ், 1991 ஆம் ஆண்டு, உதய்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராக பணியாற்றிய கிரிஜா வியாஸ், ராஜஸ்தானின் சித்தோர்கர் தொகுதியிலிருந்து 15-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கிரிஜா வியாஸின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பறித்து எறியப்படும்! - அமித் ஷா