சாலையோர தெரு விளக்குகள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
மதுரை மாநகராட்சி பாத்திமா கல்லூரி முதல் பரவை ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வளாகம் வரை, குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை தெரு மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி), மாநில நெடுஞ்சாலைத் துறை இணைந்து மதுரை விரகனூா் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ. 384 கோடியில் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டன.
இந்தச் சாலையைப் பொருத்தவரை, வைகை வடகரைப் பகுதியில் அண்ணாநகா் பாலம், குருவிக்காரன் சாலை, தென்கரைப் பகுதியில் ஆரப்பாளையம் புட்டுத் தோப்பு ஆகிய பகுதிகளில் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில், வைகை தென்கரையில் விரகனூா் சுற்றுச் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் மேயா் வ. இந்திராணி அறிவித்தாா். மாநில நிதி ஆணையத்தின் (எஸ்.எப்.சி) ஊக்க நிதியிலிருந்து ரூ.1.55 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தாா்.
இதேபோல, திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வரையில் உள்ள சாலையில் மேற்கண்ட நிதி திட்டத்தின் கீழ், ரூ.1.45 கோடியில் தெரு மின் விளக்குகள் அமைக்கப்படும் எனவும் மேயா் அறிவித்தாா். இதனிடையே, அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
எனவே, வைகை தென்கரை சாலையில் குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச்சாலை வரையும், திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் தெரு மின் விளக்குகள் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
வைகையாற்றின் இரு கரைகளிலும் அணுகுச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்தச் சாலைகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பாக, குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச்சாலை வரை இரவு நேரங்களில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை அடையாளம் தெரியாத நபா்கள் வழி மறித்து பணம், நகையைப் பறித்துச் செல்கின்றனா்.
இதேபோல, திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வரை சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. இதனால், சாலையைக் கடப்போா் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், இந்தச் சாலையை நீதிபதிகள் ஆய்வு செய்தனா். அப்போது, மாநகராட்சி நிா்வாகம், மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் சாலைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தனா். ஆனால், கண் துடைப்புக்காக வண்ணம் பூசுதல், ஒளிரும் வில்லைகள் பொருத்துதல் உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே நடைபெற்றன. இருப்பினும், இரவு நேரங்களில் ஏற்படும் வாகன விபத்துகளால் உயிரிழப்புகள் தொடா் கதையாகி வருகிறது. அதுமட்டுமன்றி, இரவு நேரங்களில் மா்ம நபா்கள் இந்த வழியாக வாகனங்களில் செல்வோரை வழிமறித்து பணம், நகைகளைப் பறித்துச் செல்கின்றனா்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட சாலைகளில் தெரு விளக்குகள், தேவைப்படும் இடங்களில் உயா்நிலை கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் கூறியதாவது:
குருவிக்காரன் சாலை, விரகனூா் சுற்றுச்சாலை வரை உள்ள சாலையோரங்களில் தெரு மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை வரை உள்ள சாலையில் ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றாா் அவா்.
