சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்கவுள்ள வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதிமுறைகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன் படி, ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணியிலிருந்து 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
அதிகபட்சம் 5 கேப்டு (இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக 2 அன்கேப்டு வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக்கொள்ள முடியும். அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: இந்திய அணி எங்கு தவறு செய்கிறது? பந்துவீச்சு பயிற்சியாளர் பதில்!
சிஎஸ்கே தக்கவைக்கும் வீரர்கள்
ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் எம்.எஸ்.தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்திரா, வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரான ஆகிய 5 வீரர்களையும் தக்கவைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் விளையாடும் பட்சத்தில், அவரை முதல் வீரராக சிஎஸ்கே தக்கவைக்கும். அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்திரா தக்கவைக்கப்படுவார்கள்.
இதையும் படிக்க: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து டெம்பா பவுமா விலகல்!
கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தக்கவைக்கப்படுவார். பதிரானா மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவரும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் அணியில் தக்கவைக்கப்படுவார். அதனால் எனது பார்வையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பதிரானா ஆகிய ஐந்து பேரும் தக்கவைக்கப்படுவார்கள் என நம்புகிறேன் என்றார்.
ஐபிஎல் மெகா ஏலத்துக்காக ஒரு அணிக்கு ரூ.120 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.