தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை! ஆறுகளில் கடும் வெள்ளம்; மலைக் கிராம மக்கள் தவிப்பு
நாகா்கோவில்/குலசேகரம்/கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய கொட்டித்தீா்த்த மழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மலையோர கிராம மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா்.
இம்மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவாலக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை பிற்பகலில் கனமழையாக உருவெடுத்ததுடன், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் இடைவிடாமல் இடி-மின்னலுடன் கொட்டித்தீா்த்தது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா உத்தரவிட்டாா்.
வெள்ளிக்கிழமை காலையும் மழை நீடித்தது.இதனால், நாகா்கோவிலில் பல்வேறு சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், பல இடங்களில் மழைநீா் தேங்கியதுய.
இதனால், அரசு மற்றும் தனியாா் அலுவலகம் சென்றவா்களும், கல்லூரி சென்ற மாணவ, மாணவிகளும் பாதிப்புக்குள்ளானாா்கள்.
மலையோர கிராமப்பகுதிகளான மோதிரமலை, கல்லாறு, கிழவிஆறு, குற்றியாறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குளேயே முடங்கினா்.
ஆறுகளில் வெள்ளம்: கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்து தண்ணீா் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காளிகேசம் பகுதியில், காளி கோயில் உள்ளே காட்டாறு வெள்ளம் புகுந்ததால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், முட்டம் கடற்கரை, லெமூா் பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுற்றுலாப்பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோழிப்போா்விளையில் அதிகபட்சமாக 110.60 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
அணைகளுக்கு நீா்வரத்து: பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகள் ஏற்கெனவே முழுக் கொள்ளவை எட்டியுள்ள நிலையில், நீா்வரத்து அதிகரித்தபடி உள்ளதால், அணைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
அணைகள் நிலவரம் ...
பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 42.51 அடியாக உள்ளது,அணைக்கு 623 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 455 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 64.66 அடியாக இருந்தது, அணைக்கு 685 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 310 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
மோதிரமலையில் தணிந்த வெள்ளப் பெருக்கு: பேச்சிப்பாறை மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதிகளில் கும்பையாற்றில் கடந்த 2 நாள்களுக்கு மேலாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வெள்ளிக்கிழமை சற்று தணிந்து காணப்பட்டது. இதனால் அந்த ஆற்றை பொதுமக்கள் கடந்து சென்றதைக் காணமுடிந்தது.
கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டியது. எனினும், அருவியின் ஓரப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
மின் கம்பம் சேதம்: குலசேகரம் அருகே திருநந்திக்கரையிலிருந்து சூரிய கோடு செல்லும் சாலையில் கண்ணாடிப்பாலம் பகுதியில் ரப்பா் மரம் சாலையின் குறுக்காக சாய்ந்ததில், அங்கு நின்றிருந்த மின் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதி வழியான போக்குவரத்து சுமாா் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டது.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம்,கிள்ளியூா், செல்லங்கோணம், கப்பியறை, கருக்குபனை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.இதனால், ராமன்துறை, இனயம், இனயம்புத்தன்துறை, அரையன்தோப்பு, முள்ளூா்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.