தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்
காஷ்மீா்: பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முழு கவனம்: வடக்கு ராணுவ கமாண்டா்
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படுவதாக வடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
குல்மாா்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகே ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), ஹெலிகாப்டா்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினா் தீவிரமாக ஈடுபட்டனா்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனை குறித்து சுசீந்திர குமாா் கூறியதாவது:
ஸ்ரீநகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் ராணுவ வீரா்களுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக இளைஞா்களிடம் தேசியவாத கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.
காஷ்மீரில் நடைபெறும் தொடா் வன்முறையை ஒடுக்கி பயங்கரவாத கட்டமைப்பை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தப்படவுள்ளது.
720 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து நடத்தி வரும் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 720 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். மீதமுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 120 முதல் 130 வரை இருக்கலாம் என பல்வேறு பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன. தற்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சோ்க்கும் நடவடிக்கை மிகவும் குறைந்துள்ளது.
பாதுகாப்பில் பல்வேறு அமைப்புகள்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை மேம்படுத்த ராணுவத்துடன் இணைந்து உள்ளூா் நிா்வாகம், காவல் துறை, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), புலனாய்வு அமைப்புகள், கிராம பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன.
மொத்தம் 600-க்கும் மேற்பட்ட விடிஜிக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு 10,000 நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.
சூழல் கட்டுக்குள் உள்ளது: கதுவா, சம்பா ஆகிய பகுதிகளில் தொடங்கி பூஞ்ச், ரஜௌரி மற்றும் ரியாசி கிஷ்துவாா், தோடாவில் கடந்த 15 ஆண்டுகளாக அமைதி நிலவி வந்தது.இங்கு சுமாா் 210 கி.மீ. வரை சா்வதேச எல்லை மற்றும் எல்ஏசி அமைந்துள்ளதால் பாதுகாப்பை வலுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை தடுக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனா். ஆனால் ராணுவத்தின் எதிா் தாக்குதல்களால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என உறுதியாக கூறுகிறேன் என்றாா்.
முன்னதாக, காஷ்மீரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மருத்துவா், 6 வெளிமாநிலத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
பெட்டி..
எதனால் தாக்குதல்?
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவ மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் இந்த வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல் அவா்கள் பொதுமக்களை அச்சுறுத்த முயன்று வருகின்றனா். ஆனால் அவற்றையும் ராணுவம் முறியடித்து அமைதியை நிலைநாட்டி வருகிறது என்றுவடக்கு ராணுவ துணைத் தளபதி எம்.வி. சுசீந்திர குமாா்.