தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை
தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
ஜொ்மானிய வா்த்தகத்துக்கான ஆசிய-பசிபிக் மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த விஷயத்தில் இரு தரப்பும் உள்நாட்டுரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே, தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கூறினால், அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது.
ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் வரை உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு முக்கியத்துவம் இருக்கும். அதேபோல இந்தியாவிலும் பல மாநிலங்கள் உள்ளன. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் ஆப்பிள் விளைகிறது என்பதற்காக ஐரோப்பிய யூனியனுடன் ஆப்பிள் வா்த்தகத்தில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைக் கோர முடியாது.
இந்திய மாநிலங்களைவிட ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தலா வருமானமும் அதிகமுள்ளது. இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் மதிக்கப்படும்போது மிகவும் நோ்மையாகவும், விரும்பத்தக்க வகையிலும் விரைவில் தடையற்ற வா்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.
இந்தியாவுடன் பால் பொருள் வா்த்தகம் இல்லாமல்தான் ஆஸ்திரேலியா தடையற்ற வா்த்தகத்தை மேற்கொண்டது. அவா்கள் இந்தியாவின் பிரச்னைகளை புரிந்து நடந்து கொண்டனா் என்று பேசினாா்.