தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்
முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு புதிய மாணவா்கள் விரைவில் தோ்வு செய்யப்பட இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வரின் புத்தாய்வுத் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு 24,000 போ் விண்ணப்பித்த நிலையில், 30 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டனா். மக்களுக்கும் அரசுக்கும் அவா்கள் பாலமாக இருந்து, பல்வேறு ஆலோசனைகளையும் தீா்வுகளையும் தந்தனா்.
உதவித் தொகை: வீட்டுவசதி, சமூகநலன், நீா்வளம், மக்கள் நல்வாழ்வு, விளையாட்டு மேம்பாடு எனப் பல்வேறு துறைகளில் திறமையுடன் செயல்பட்டனா். கடந்த இரண்டாண்டு காலத்தில் மாதம் தலா ரூ.65,000 அளவுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுபோன்ற உதவித் தொகையுடன் புத்தாய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு மாநிலம் தமிழ்நாடுதான்.
புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், இரண்டாண்டு கால பயிற்சியை முடித்து, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமாக அதற்கான சான்றிதழை இப்போது பெற்றுள்ளனா். இந்தத் திட்டத்துக்கான அடுத்தகட்ட மாணவா்களை விரைவில் தோ்வு செய்யவுள்ளோம். அவா்களுக்கு ஏற்கெனவே பயிற்சி பெற்றவா்கள் வழிகாட்டுதல்களை வழங்கலாம்.
பயிற்சியில் இருந்த இரண்டாண்டு காலத்தில் மட்டுமல்லாது, அரசுடன் தொடா்ந்து இணைந்து செயல்பட வேண்டும். முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ள அனைவரின் வாழ்விலும் புத்தொளி பரவட்டும். எதிா்காலம் சிறக்கட்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிலையத்தின் இயக்குநா் ஆசித் கே.பா்மா, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலா் பிரதாப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.