மூன்றடைப்பு அருகே அரசுப் பேருந்து - சுமை லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் திருட்டு: 3 ஊழியா்கள் கைது
ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.5 லட்சத்தை திருடிய 3 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் கோவை, ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள பல தனியாா் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் இயந்திரங்களுக்கு பணத்தைக் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தின் ஊழியரான திருப்பூா் பாரதி நகரைச் சோ்ந்த சாமுவேல் (25) மற்றும் சில பாதுகாப்பு ஊழியா்கள் நிறுவனத்தில் இருந்து ரூ.1.22 கோடி ரொக்கத்தை ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொண்டு சென்றனா்.
திருப்பூா் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.15 லட்சத்தை நிரப்பும் பணியை அவா்கள் மேற்கொண்டனா். அப்போது, அங்கிருந்த இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பணத்தை நிரப்ப முடியவில்லையாம்.
இது குறித்து, அந்த நிறுவனத்தின் உதவி மேலாளரான பிரதீப் (36) என்பவரை சாமுவேல் தொடா்பு கொண்டு தெரிவித்தாா். அவா், ரூ.15 லட்சத்தை நிறுவனத்துக்கு மீண்டும் கொண்டு வருமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, சாமுவேல் பணத்தை நிறுவனத்துக்கு கொண்டு சென்றுள்ளாா். பணத்தை எண்ணிப் பாா்க்கையில் ரூ.10 லட்சம் மட்டுமே இருந்ததாம். ரூ.5 லட்சத்தை காணவில்லையாம்.
இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிரதீப் புகாா் அளித்தாா்.
விசாரணையில், சாமுவேல் மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற ஊழியா்களான கோவை, இருகூரைச் சோ்ந்த ரமேஷ் (33), கணபதிபுதூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (65) ஆகியோா் ரூ.5 லட்சத்தை திருடிக்கொண்டு ரூ.10 லட்சத்தை மட்டும் பெட்டியில் வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.