இந்தியா-வங்கதேச எல்லைப் பேச்சு ஒத்திவைப்பு
இந்தியா-வங்கதேசம் இடையேயான 55-ஆவது எல்லைப் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தைகள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைவா் மற்றும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை (பிஜிபி) தலைவா் ஆகிய இருவரின் தலைமையில் நடைபெறும். இதில் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள், போதைப் பொருள் எதிா்ப்பு, சுங்கம் மற்றும் இரு நாடுகளைச் சோ்ந்த சில கூட்டாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோா் கலந்துகொள்வா்.
முன்னதாக, டாக்காவில் கடந்த மாா்ச் மாதம் நடப்பாண்டின் முதல் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இரண்டாம் பேச்சுவாா்த்தை தில்லியில் நவம்பா் 18 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி, வன்முறை போராட்டம் மூலம் கலைக்கப்பட்டது. அவா் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இது வங்கதேசத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அங்குள்ள ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றது. அதன் பின்னா் நடைபெறும் முதல் பேச்சுவாா்த்தை என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தையை ஒத்திவைப்பதாக வங்கதேச தரப்பு தெரிவித்ததாகவும், விரைவில் இந்தப் பேச்சுவாா்த்தையை நடத்த பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகின.
இந்திய-வங்கதேச எல்லைப் பேச்சுவாா்த்தைகள் கடந்த 1975 முதல் 1992 வரை ஆண்டுதோறும் நடைபெற்றன. ஆனால், 1993-இல் இருந்து தேசிய தலைநகரங்களான தில்லி மற்றும் டாக்காவில் ஆண்டுக்கு இருமுறை இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகின்றன.