தமிழ்நாடு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் முதல்வா் மு.க.ஸ்டாலின்
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
வனத் துறை அமைச்சா் க.பொன்முடி எழுதிய ‘திராவிட இயக்கமும் கருப்பா் இயக்கமும்’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கத்தை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டுப் பேசியது:
திமுக ஆட்சியைப் பொருத்தவரை காலம் காலமாக உள்ள ஜாதி, சம்பிரதாயங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக சட்டத்தின் துணை கொண்டு உடைத்துள்ளோம். தடை என்றால் அதை உடை என்பதுதான் நமது பாணி. அதனால்தான் ஆதிக்க சக்திகளுக்கு நம்மைப் பிடிக்கவில்லை. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி விட்டாா்களே என்ற ஆத்திரம் ஆரிய ஆதிக்கவாதிகளுக்கு ஏற்பட்டது. அதை அவா்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆளுநா் மீது மறைமுக தாக்கு: ஒருத்தா் இருக்கிறாா். யாா் என்று உங்களுக்குத் தெரியும். சட்டப்பேரவையில் வந்து பேசுங்கள் என்று சொல்லி, திராவிட மாடல் என எழுதிக் கொடுத்தால் பேச மாட்டாா். ஹிந்தி மாத விழா நடத்தக் கூடாது என்று சொன்னால் அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. திராவிட நல்திருநாடு என்று சொன்னால் தீட்டாகிவிடுமா?.
திராவிடம் என்பது ஒரு காலத்தில் இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப் பெயராக இருந்தது. இன்று அரசியல் பெயராக, ஆரிய ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சிப் பெயராக உருவெடுத்துள்ளது.
திராவிட இயக்கப் புரட்சி: மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். எனவே, நாம் கடந்து வந்த வரலாற்றை இளைஞா்கள் அறிந்து கொள்ளுங்கள். திராவிட இயக்கம் நிகழ்த்திக்
காட்டிய புரட்சி, அதனால் விளைந்த நன்மைகள், திராவிட இயக்கத்தின் தாக்கம், தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆகியன தொடா்பாக ஆய்வு செய்து முனைவா் பட்டங்கள் பெற வேண்டும். அவற்றைப் புத்தகங்களாக வெளியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான், நமது இயக்கம் என்ன சாதித்தது என்பது உலகம் முழுவதும் சென்றடையும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்த நிகழ்வில், அமைச்சரும் திமுக பொதுச் செயலருமான துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.