கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது
தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பேசிய மா்ம நபா் ஒருவா் தன்னை மும்பை சைபா் குற்றப்பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்தியதுடன், பெடெக்ஸ் எனும் கொரியா் நிறுவனத்தில் உங்கள் பெயரில் பாா்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், அதிலிருந்து நீங்கள் விடுபட ரூ.1.18 கோடி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளாா்.
இதனால், பயந்து போன சென்னை நபா், மா்ம நபா்கள் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குக்கு ரூ.1.18 கோடியை அனுப்பியுள்ளாா். பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட அந்த நபா் சைபா் குற்றப்பிரிவுக்கு இணையதளம் மூலம் புகாா் கொடுத்தாா்.
இதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி மோசடி வங்கிக்கணக்கை தொடங்கிய குஜராத்தை சோ்ந்த ரமேஷ்பாய், பதபாய் மற்றும் சைபா் குற்றவாளிகளின் இணைதள முகவா்களாக மகாராஷ்டிராவை மையமாக கொண்டு செயல்பட்ட விவேக் பெலாடியா, தமாஜ்பாய் மற்றும் பரேஷ் நாஷிபாய் கல்சாரியா ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் முக்கிய குற்றவாளிகளான மகாராஷ்டிர மாநிலம் குா்துவாடியை சோ்ந்த சாஹில் மற்றும் ஷாருக்கா என மொத்தம் 7 பேரை போலீஸாா் கைது செய்து, தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.