மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 34 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு!
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 34 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
சிக்கிமில் பெய்து வரும் தொடர் கனமழையால், அம்மாநிலத்தின் வடக்குப் பகுதியிலுள்ள, சட்டென் பகுதியில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள ராணுவ முகாம் உள்பட பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்தச் சம்பவத்தில், 3 ராணுவ வீரர்கள் பலியான நிலையில், 6 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த சுமார் 34 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு பக்யோங் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.
தற்போது, மீட்கப்பட்டுள்ளவர்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர்கள், லக்விந்தர் சிங், நாயக் முனிஷ் தாக்குர், அபிஷேக் லகாந்தா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதையும் படிக்க:சிக்கிம் நிலச்சரிவு: மாயமான வீரர்களைத் தேடும் பணி தீவிரம்! களமிறங்கியது தேசிய படை!